ஊட்டி 2019 - குருநித்யா கருத்தரங்கு
ஊட்டி விவாத நிகழ்வுகளுக்குச் செல்லும் பேருந்துப் பயணங்களில், மலையேறத் துவங்கும்முன் காலைநேரத்தில் எழுந்துவிடுவேன். மலைவெளி விரித்த பச்சை அழகினை தவறவே விடாமல், பார்த்துச் செல்வது கடந்த சில வருடங்களாக எனது வழக்கம் . ஆனால் இந்த முறை அலுவலகத்தில் பாதியில் விட்டு வந்ததால் பின்தொடர்ந்த ஒரு வேலையின் நினைவுச் சுமையுடன் பேருந்து ஏற நேர்ந்தது. பெருங்களத்தூர் விலக்கில், ஒளி கக்கிய பாதரச விளக்கு கம்பத்தின் அருகில் நின்ற பேருந்தில் ஏறியவுடன் தூங்கியவன் , ஊட்டி பேருந்து நிலையத்தில்தான் எழுந்தேன்.. ்பெர்ன்ஹில் செல்லும் பாதை நன்கு அறிமுகமாகி இருந்ததால் மூன்று சக்கர குலுங்குந்து பிடித்து குருகுலம் வந்து சேர்ந்தேன். 2018 ஊட்டி இலக்கிய முகாமிற்கு கரம்சோவ் சகோதரர்கள் உரைக்கான தயாரிப்பினைத் தவிர மற்ற எந்த படைப்பையும் வாசிக்கவில்லை என்ற குறை இருந்தது. சுனீல் கிருஷ்ணன் ரிப்பன் கத்தரித்து துவங்கிய 1000 மணிநேர வாசிப்பு மாரத்தான் ஓட்டத்தின் புண்ணியத்தினால், இந்த முறை விவாதத்திற்காக தேர்ந்தெடுத்த சிறுகதை, கவிதை, அறிபுனைக்கதைகள் என அனைத்து படைப்புகளையும் குறைந்தபட்சம் ஒருமுறை வாசித்த ...