பறக்கை நிழற்தாங்கல் 2017

 

நாகர்கோவில் அருகே இருக்கும் சிற்றூரான பறக்கையில் கவிஞர்,எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் படிகம் ரோஸ் ஆன்றோ இணைந்து நடத்தி வரும்  நிழற்தாங்கல்(படைப்பிற்கான வெளி) அமைப்பின் சார்பாக ‘ஜெயமோகனுடன் ஒரு நாள்’ இலக்கிய கலந்துரையாடல்  நிகழப்போகிறது என்ற பதிவைஅவரது தளத்தில் பார்த்தேன். தவறவே விடாமல் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என முன்பதிவு செய்துவிட்டேன். இதற்கு முன்னர்  கன்னியாகுமரிக்கு, திற்பரப்பு அருவிக்கு நாகர்கோவில் வழியே சென்றிருந்தாலும், நாகர்கோவிலுக்குள் இதுவே முதன் முறை. ஜெவின் எழுத்துகள் வழியே கற்பனையில் அங்கு நிறைய அலைந்திருக்கிறேன் எனினும்  கால் பதித்து சுற்றி திரிய போகின்றேன் என்கிற எண்ணமே கிளர்ச்சியை தந்தது. அங்கு எங்கு தங்கபோகிறோம் என எதனை பற்றியும்  யோசிக்காமல், எழுந்த குன்றாத ஆர்வத்த்துடன் முந்தின நாள் காலையிலேயே  கிளம்பி வந்துவிட்டேன். மேற்கில் மலையடிவாரங்களில் சிதறி வியாபிதிருந்த காற்றலைகளை கடந்து ஆரல்வாய்மொழி கணவாய் வழியே உள்ளே நுழைந்தபோது  வேறொரு நிலப்பகுதிக்கு வந்துவிட்டது போல இருந்தது. பசுமையும் வெக்கையும் ஒனறையொன்று ஆக்கிரமிக்க முனைந்து கொண்டிருந்தன. ராம லக்ஷ்மி கல்லூரி அருகில் தாழக்குடி என்கிற ஊர் வழிசொல்லும் போர்டை பார்த்ததும், சோற்றுகணக்கில் வரும் ராமலக்ஷ்மியும் தாழக்குடி மாமியும் நினைவிற்கு வந்தார்கள்.

கவிஞரும் எழுத்தாளருமான லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அவர் நாகர்கோவிலிருந்து பக்‌ஷிராஜபுரம்  என்னும் பறக்கைக்கு அழைத்து சென்றார். பேசும் போது மீசையை முறிக்கியபடி பேசிக்கோண்டிருந்தார். ஜெயகாந்தன் கால உடல்மொழியாக இருந்திருக்க வேண்டும். குமரி மாவட்ட இலக்கியவாதிகள் பற்றியும், எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன்  அவருக்கான தொடர்பு பற்றியும் சுருக்கமாக பேசினார். அவரின் மகன் ரிஷிநந்தன்  +2 தேர்விற்கு படித்துவருகிறான். என் ஒரு வயது பையனும் ரிஷிதான் ‘ரிஷிவர்தன்’ அவன் பெயர் என்ற போது , இன்னும் நெருக்கமாக உணர்ந்தோம். நாகர்கோவிலிலிருந்து  மணக்குடி செல்லும் வழியில், நெருக்கமாக அமைந்த அழகிய சிற்றூர்களுக்கு இடையில்,  சுசீந்திரம் தாணுமலையான்  கோயிலுக்கு நேர் பின்னால், பறக்கை பெயரிலேயே உள்ள ஏரியின் அருகே ,அமைந்திருந்த்து. என் மனைவி மாலதியிடம் எந்த ஊருக்கு சென்றாலும்  ரம்மியமாக இருக்கிறது இங்குதான் சென்னையை விட்டு வந்து செட்டில் ஆக போகிறோம் என இதுவரை பல ஊர்களை கூறி வந்திருக்கிறேன்.  அவ்வாறு செட்டில் ஆக தகுதியான அமைதியான முக்கியமாக தூய்மையான ஊர். 

தாழ்ந்த சாதி மக்களின் முன்னேற்றத்துக்காக 18ம் நூற்றாண்டில் அய்யா வைகுண்டர் தோற்றுவித்த, தென்தழிழகத்தின் முக்கியமான வழிபாட்டு முறையான அய்யாவழியில் நிழல் தாங்கல், என்றால் தங்குமிடம் என்று பொருள். படைப்பாளிகள் நிழற்தாங்கல் நிறுவனரான லக்ஷ்மி மணிவண்ணன் அனுமதி பெற்று அங்கு தங்கி எழதலாம்.  படைப்பாளிகளுக்குகான ஏற்ற சூழல்.

நிழற்தாங்கலுக்கு அருகில் இரண்டாவது முடுக்கின்  (ஒரு சிறுவன் வழிகாட்டினான். முடுக்கு என்றால் , எங்களூரின் சந்து என்று உணர சில வினாடிகள் பிடித்தது. என்னடா இது இந்த ஊரில் எல்லோருமே ஜெ போலவே பேசுகிறார்கள்) வழியே அங்கிருக்கும் மதுசூதன பெருமாள் கோவிலுக்கு சென்றேன். பூதேவி, மாதேவி நடுவே  சந்தன காப்புடன் மதுசூதனன் நின்றிருந்தார். சட்டையை கழற்றி நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டது  புதுமையான அனுபவமாக இருந்தது. பெண்கள் அமர்ந்து வாழ்த்துபாடல் பாடிகொண்டிருந்தார்கள். இவர்களோடு சேர்த்து எனது பாட்டிக்கும் பாட்டனுக்கும் ஒரு காலத்தில் ஆலய நுழைவு மறுக்கப்பட்ட இடமாக இருந்திருக்கலாம்.  தண்டு பகுதியில் வளைவுகள், வேலைபாடுகள் இல்லாமல் இருந்த கேரளா பாணி குத்துவிளக்கை பார்த்து கொண்டிருந்தேன். அதற்கு திரி வைத்து விளக்கேற்ற முகங்களின் எண்ணிக்கைக்கு முடிவில்லை. கோயில் திருப்பணிக்கான மரவேலை நடந்து கொண்டிருந்து. பணம் வசூலிப்பதே முதன்மையாக மாறிவரும்  மதுரை  மீனாட்சி அம்மன் கோயில் ஶ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் கோவில்களுக்கு அண்மை காலமாக சென்றது நல்ல அனுபவமாக இருக்கவில்லை. அது போல வெம்மையான இல்லாமல் குளுமையான அனுபவமாக  இருந்தது.

பின் நிழற்தாங்கலில் கவிஞர்,எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணனுடன் குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு சேர்ந்த போராட்டத்தின் பின்ணணி பற்றியும் , அதில் வழக்கறிஞர் ,  நேசமணி பங்கினையும் பற்றி விவாதித்தோம்.  அவருக்கு அரசியல் போட்டியாக காமராஜரால் அமைச்சராக்கப்பட்ட  லூர்த்தம்மாள் அவர்களை பற்றியும் விவாதித்தோம். பின்னர் சிலேட் மாதஇதழில் வெளிவந்திருக்கும் ஷோபா சக்தியின் ‘ஒரு உள்ளக விசாரணைய’ சிறுகதையை, வாசித்தேன்.  ஈழத்தில் போர் ஓய்ந்த இன்றைய சூழலில் ஒரு கிணறை தோண்டுகிறார்கள், அங்கு எடுக்க எடுக்க சிதைந்த சடலங்கள் வருகின்றன.அதில் ஒரு உயிருள்ள மனிதனும் வருகின்றான். அவனை வெளிகொணர்ந்து, ஆசுவாசபடுத்தி, அவன் பின்ணணி பற்றி விசாரிக்கிறார்கள். 80களின் போர் சூழலையும் அரசியல் சூழலையும் விவரிக்கின்றார் அவன்.  சிங்களராணுவம், விடுதலை போராளிகள் எவராலும் உயிருடன் புதைக்கப்பட்டிருந்தாலும் இன்றைய சமாதான சூழலில் அந்த பினண்ணி தேவையில்லை என மீண்டும் அவன் அதே கிணற்றில் உயிருடன் புதைக்கப்படுகிறான் என்று முடிகிறது. தேவையான குறைந்த விவரிப்பில் போர் சூழலை உணர்த்தும் கதை இது,  போர் ஓய்ந்த சூழலில் நீதி விசாரனை செய்பவர்கள் மீது மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் அறத்தின் கேள்விக்கு முன் நிறுத்துகிறது.. உண்மை எப்போதும் போல கிணற்றுக்கடியில் இருட்டில் ஆழமாக புதைக்கப்படுகிறது. எழுத்தாளன் அவனரறிந்த உண்மையை , புனைவின் மூலம் உணர்வுடன் தோண்டி எடுத்து காட்டுகிறான்.

அன்று கப்பலில் பணி புரியும் நாஞ்சில் Jack Sparrow வான  ஷாகுல் ஹமீதினை சந்தித்தேன். ஜெ தளத்தில் வெளிவந்த அவரது ஈராக் போர் முனை அனுபங்கள் பதிவுகளை ஒரே மூச்சில் வாசித்திருக்கிறேன். அவரது தாயன்பு பதிவில் , 3 வயது வரை அவருக்கு பேச்சு சரிவர வரவில்லை என்பது முதலில்  நம்ப முடியவில்லை. பள்ளி விழாவில் நடக்கும் 4 அடுக்கு மாணவ பிரமிடுகளின் உச்சியில் கொடி பிடிக்கும் உரிமை, 14 வயது வரை பெற்ற 22 கிலோ மாணவனாக நான் இருந்திருந்ததால் அவர் சொன்னதையும் நம்ப நேர்ந்த்து. .  அவரது அன்னையால் நேர்ச்சை நிறைவேற்றப்பட்டு அவர் தெளிவாக பேச ஆரம்பித்த சித்திரம் உணர்வெழுச்சி தந்த்து.  அவரின் எழுத்து போலவே குரலும் கணீரென்றிருந்த்து. தனது பயண வாழ்வில் பல செறிவான அனுபங்கள் பகிர்ந்தார். கடலின் கடுமையான சூழல் பற்றியும், மாலுமிகளுக்கான விசா கொள்கைகள் பற்றியும் விளக்கினார். கடலின் நடுவே கப்பல் இஞ்சினில் ஏற்பட்ட தீவிபத்தினை மட்டுபடித்தியதை விவரித்த நிகழ்ச்சி கேட்டு விதிர்விதிர்த்தேன்.  பொதுவாக கப்பலில் பணிபுரியும் நண்பர்கள் மீதிருக்கும் தேய்வழக்கான சர்வதேச பாலியல் தொடர்பு போன்ற சில எண்ணங்களை கட்டுடைத்தார் , மெக்சிகன் மாலுமி வழியாக மீள கட்டினார்.

இரண்டவாது நாள், காலையில் வழக்கம்போல அரைமணி நேரத்திற்கு முன்னரே ஜெ நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவருடன் குறுநடை சென்று க.நா.சு டீ குடித்த கடையில் கூட்டு தேநீர் அருந்தினோம்.  வழக்கம்போல எந்த வித சம்பிரதாயமும் இல்லாமல் கலந்துரையாடல் அரம்பித்தது.  முதலில் தென்னிந்திய கட்டிட கலை பற்றியும், குடைவரைவு கோயில்களின் அமைப்பை பற்றியும்  ஆரம்பித்தது.  புனே அருகில் அமைந்திருக்கும் புத்த பாணி கட்டிட கலையில் அமைந்த, கார்லே குடைவரைவு கோயில்தான்  இந்தியாவிலேயே மிக தொன்மையான குடைவரைவு கோயில் என்றார்.  தொன்மையான கலவெட்டுகளை  பாதுகாக்கும் அக்கறை இல்லாத ஒரு சமூகமாக இருக்கிறோம் என்றும். மதுரை அருகே இருக்கும் சமணர் கல்வெட்டுகள் கவனிக்காமல் விட்டதனால், அழிந்து வருவதாகவும் கூறினார். காது நீண்டு தொங்கிய நிலையில் அமர்ந்திருக்கும், சமண தீர்தங்கரர், தங்கள் காது செட்டி  மூதாதையர் சிலை என்று ஒரு ஊரின் மக்கள் பாதுகாத்து வருவதையும் குறிப்பிட்டடார்.

ஆரம்ப கால தமிழக கட்டிட கலையில் தூண்கள், மரத்தினை கொண்டு அமைந்திருக்கலாம் என்றும், பின்னர் கல்லை வெட்டி எடுக்கும் தொழிற்நுட்பம் வந்தவுடன் கட்டப்பட்ட கோவில் கட்டிடங்களில்  மரதூண்கள் கல்தூண்களாக மாறியிருக்கலாம் என்றும் கூறினார். சில கோயில்களின் கல்லாலான தீர்த்த குழாயில், மர சட்டக வடிவில் அமைந்த கல். முட்டு கொடுக்க, அமைந்திருப்பத்தாகவும், அது முந்தைய காலகட்ட மரகட்டிடகலை தொழிற்நுட்பத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும், ஆனால் அது கல்லாலான தீர்த்த குழாய்க்கு தேவையில்லை எனவும் ஜெ கூறினார்.

கட்டிடகலை, மருத்துவம் போன்ற நமது முன்னோர்கள் வளர்த்து எடுத்த துறைகள் என்பது , தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட பட்டறிவு என்கிற வகையில் பழக்கப்பட்ட தொழிற்நுட்பமாக மட்டுமே இருந்ததாகவும், அது அறிவியல் கொள்கைகளாக கோட்பாடுகளாக மாறவில்லை என்பது மாபெரும் குறை என்றார். அவ்வாறு அறிவியலை  கோட்பாடாக மாற்றப்பட்ட ஐரோப்பாவில் மாபெரும் பாய்ச்சல் நிகழ்ந்த்து எனவும் கூறினார்.

லக்ஷ்மி மணிவண்ணன் அவர் அண்மை காலத்தில் எழுதிய கவிதையை வாசித்தார்.  படிகம் ரோஸ் ஆன்றோ நிழற்தாங்கல் அமைப்பின் நோக்கம் பற்றி சிறு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆசிரியர் ஓருவர், தமிழாசிரியர்கள் மீது ஜெ வைக்கும் விமர்சனங்கள் பெரும்பாலும் நடைமுறை உண்மை என்றும்.  விதிவிலக்காக,  தான் தன்னால் இயன்ற அளவு இலக்கியத்தையும் ,அறிதலையும் மாணவர்களுக்கு கற்பிப்பதாகவும் கூறினார். அதற்கு ஜெ தான் பணிசெய்த காலம் முழுவதும் மாணவர்களுக்கு இலக்கியத்தை  வரலாற்றை அறிதலையும் கற்பித்த்தவர் அ கா பெருமாள்.  50 புத்தகங்க்ளுக்கு மேல் எழுதிய எழுத்தாளரான ,அவர், கற்பித்தலில் பாட திட்டத்தை தாண்டி அறிவூட்டுதலில் உதாரண ஆசிரியாராக இருந்திருந்திருக்கிறார். இருப்பினும் அவர் பணியாற்றிய கல்வி நிறுவனம்  பிரிவு உபசார விழா கூட நடத்தப்படாமல் அவருக்கும் பணிஓய்வு அளித்தது. பின்னர் அவரின் பங்களிப்பின் மீது கொண்ட மதிப்பால், தானே விழா நடத்தியதாகவம் ஜெ கூறினார்.  அவ்வாறு கற்ற  அ கா பெருமாளின் மாணவர்களில்  பலர் தனது இணையதளத்தில் வந்த நல்ல வாசகர்களாக அமைந்திருக்கார்கள் என்றார். ஆசிரியர்களின் கடமை விளைவினை எண்ணாமல் விதைத்தல் என்றார் ஜெ. 

பின்னர் விவாதம் படைப்பினை நோக்கி சென்றது, படைப்பில் மேலும் மேலும் நுண்மையை சேர்ப்பதுதான் படைப்பாளியின் கடமை என்றும், ஒரு படைப்பில் தத்துமும் சேர்ந்து நிகழ்ந்தால் அது அந்த படைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்றார். நவினத்துவர்களான அசோகமித்ரன், சுந்தர ராமசாமி அவர்கள் மரபின் மீதும், தத்துவத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றார். உதாரணமாக ஒரு கதையை விவரித்தார்.  தன் குழந்தையை தானே கொன்ற அன்னையை பற்றிய கதை என்றால், சமாத்காரமாக கதையை மட்டும் சொல்லி வாசகனுக்கு அனுபவத்தை நிகழ்த்த மட்டுமே செய்யாமல், அந்த நிகழ்வின் தத்துவ விசாரணையே படைப்பினை ஆழமான அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என்றார்..

அவரின் சிங்க்ப்பூர் பயண அனுபவத்திலிருந்து கிழக்கு ஆசியா நாடுகளின் கல்விமுறைகள் பற்றி விவாதம் நிகழ்ந்தது.. அந்த அரசாங்கம் பல மில்லியன் செலவழித்தும், புதுமையான பல சலுகைகள் அளித்தும் புத்தகவாசிப்பினை ஊக்குவிக்க முடியவில்லை என்றும் கூறினார்.  ஜப்பான் ஒழுக்கம், உழைப்பு, மனப்பாடத்தை வலியுறுத்தும்  பாரம்பரிய கல்விமுறையால் தேங்க ஆரம்பித்திருப்பதாகவும், அதன் தாக்கம் கொரியா, சிங்கப்பூர் நாடுகளில் தெரிவதாகவும் கூறினார். பின்னர் இந்திய கல்விமுறையை பற்றி விவாதிக்கையில், மெக்காலே அறிமுகப்படுத்திய சமன்படுத்தப்பட்ட தரகல்வி தான் பாரம்பரிய கல்வியை அழித்தது என  வாசகர்கள் கடுமையான விமர்சனங்களை கூறினார்கள்.  பிரிட்டன் தந்த அரசாங்க சட்டம், நீதிமன்றம், அறிவியல், தொழிற்நுட்பம் இவற்றுடன் சமன்படுத்தப்பட்ட தர கல்வியும் பரவலான  மக்களுக்கு  சென்றடைந்து நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது என்றும்.   மேற்கினை பற்றி விமர்சிக்கையில்  கொடைகளான மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டே, சாபங்களான சுரண்டல், பஞ்சம், பிரித்தாள்தல் போன்றவற்றையும் பேசும் சமனிலை வேண்டும் என்றார்.

இன்னும் இன்னும் என்ற எண்ணத்துடன் சோர்வே இல்லாமல், விழா முடிவது தெரியாமல் முடிந்தது. மதியம் அவியல், பாயாசத்துடன் கூடிய உணவு, மாலையில் நாகர்கோவில் சென்று அசோகமித்ரன் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று, மனநிறைவுடன் தூங்கி எழுந்து. சென்னை வந்து சேர்ந்தேன்.

<முற்றும்>

கருத்துகள்

கருத்துரையிடுக

பின்னூட்டம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்