கலைச்செல்வியின் மாயநதி - வாசிப்பனுபவம்

‘ஐந்திணை’ நிகழ்வி்ற்காக வாசித்த சிறுகதை தொகுப்புகளில் கலைச்செல்வியின் ‘மாயநதி’ , அதன் உள்ளடக்கம், வேறு வேறு கதைச்சூழல்கள் , கதைக்கருக்கள் போன்ற தன்மைகளால் பிறிதொன்றில்லாத வாசிப்பனுபவம் தந்தது. இந்த தொகுப்பின் கதைகளை, வேளாண் நிலத்தின் மண்துகள் வாசனையை நாசியில் நிரப்பியபடி, கால்களை அழுத்தமாக நீர் குழைத்த செம்பழுப்பு ஈர மண்ணில் ஊன்றச் செய்த, கதைகள் ஒரு வகையாகவும், எண்ணவோட்ட சித்தரிப்பு மட்டும் முதன்மையாக அமைந்த பிற வகைகளாகவும் பிரிக்கலாம். இந்த வகைமைகளுக்கு வெளியே மருங்கையம்மன் போன்ற இருள்மிகுபுனைவும்(dystopian), வியாழக்கிழமை, பெரியாயி போன்ற யதார்த்தவாத முயற்சிகள் எனவும் ஒரே அமர்வில் வாசிக்க முடிந்த சிறுகதைத் தொகுப்பு இந்த ‘மாயநதி’. வாசிப்பின்போது கதைக்களன்களும், பாத்திரங்களும் ஏற்கனவே வாசகன் அறிந்தவைகளாகத் தோன்றினாலும், இந்தக் கதைகள் தனித்துவமான நோக்கம், பார்வை, மொழிபுடன் புனையப்பட்டுள்ளன. வறட்சியால் நீர்நிலைகள் அழிவது, வேளாண் நிலங்கள் கைவிடப்படுவது,...